search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை  மாணவன் பலியான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்  ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை
    X

    களியக்காவிளை மாணவன் பலியான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை

    • மாணவன் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
    • மாணவன் அஸ்வின் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவன் குளிர்பானம் குடித்ததாக கூறப்படும் பள்ளியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது.
    • அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    நாகர்கோவில், அக்.18-

    களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சோபியா. இவர்களது மகன் அஸ்வின் (வயது 11).

    இவன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அஸ்வினுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அஸ்வின் சேர்க்கப்பட்டான்.

    அப்போது அவனை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின், ஆசிட் போன்ற ஏதோ திரவத்தை குடித்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிறுநீரகம் செயலிழந்திருப்பதாகவும் கூறினர். இதையடுத்து சிறுவனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அப்போது அஸ்வின், பெற்றோரிடம் தேர்வு முடிந்து வீட்டுக்கு வரும்போது பள்ளி சீருடையில் வந்த மற்றொரு மாணவர் ஒருவர் தனக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க கூறியதாகவும், அதை குடித்ததாகவும் தெரிவித்தான்.

    அந்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருக்கலாம் என்று அஸ்வினின் பெற்றோர் சந்தேகிக்கிறார்கள் .இது குறித்து அஸ்வின் தாயார் சோபியா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இந்த நிலையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரை சந்தித்தும் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் உடல்நிலை மோசமான அஸ்வின் நேற்று மாலை பரிதாபமாக இறந்தான். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.மாணவன் அஸ்வின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அஸ்வினின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை முழுவதையும் சி.சி.டி.வி. பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் தான் அஸ்வின் இறப்பிற்கான முழு விவரமும் தெரியவரும்.

    மேலும் அஸ்வினுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுத்தது யார் ? என்பது இன்னும் மர்மமாக உள்ளது .

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், மாணவன் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். மாணவன் அஸ்வின் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவன் குளிர்பானம் குடித்ததாக கூறப்படும் பள்ளியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது. அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×