search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் நாய் துரத்தியதில் காயம்- வலிக்காக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி  பலி
    X

    கோவையில் நாய் துரத்தியதில் காயம்- வலிக்காக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பலி

    • பேச்சுமூச்சின்றி அசைவற்று இருந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
    • பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையம் அண்ணல் காந்தி வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லட்சுமி (வயது 60).

    தீபாவளியன்று இவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது இவரை நாய் துரத்தியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமிக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இரவு வீட்டில் இருந்த போது அவருக்கு வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் லட்சுமி வீட்டில் இருந்த 60-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டார்.

    சிறிது நேரத்தில் மயங்கிய அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் லட்சுமியை அவரது மகன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க போவதாக கூறி விட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    வீட்டில் இருந்த போது லட்சுமி மூச்சு பேச்சு இல்லாமல் அசைவற்று இருந்தார். உடனடியாக குடும்பத்தினர் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியை பரிசோதனை செய்தனர். அப்போது மூதாட்டி ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×