search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு பகுதிகளில் இலைக்கருகல் நோய் பாதித்த வாழை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்று அதிகாரிகள் நடவடிக்கை
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    களக்காடு பகுதிகளில் இலைக்கருகல் நோய் பாதித்த வாழை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்று அதிகாரிகள் நடவடிக்கை

    • வாழை நடவு செய்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், திடீரென்று வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு யூனியனில் உள்ள திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர்.

    இவர்கள் வாழை நடவு செய்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், திடீரென்று வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பால், வாழை இலைகள் சீக்கிரமாகவே மஞ்சள் நிறமாகி, பழுத்து வீணாகி வருகின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், உடனடியாக வேளாண்மைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.

    இதையடுத்து நெல்லை தோட்டக்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன் தலைமையில் களக்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சண்முகநாதன், தோட்டக்கலை அலுவலர் இசக்கி முத்து, உதவி அலுவலர் கிளாஸ்டன் ஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் களக்காடு பகுதிக்கு விரைந்து வந்தனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அதிகாரிகளை இலைக்கருகல் நோயால் வாழைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டினார்.

    வாழையில் இலைக்கருகல் நோயை பார்வையிட்ட அதிகாரிகள், தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாறுபாட்டால் 'சிக்கோடக்கா' என்கிற இலைப்புள்ளி நோய் வாழைப்பயிரை தாக்கி யுள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த நோய் தாக்குதலில் இருந்து வாழைப் பயிர்களை காப்பாற்ற என்ன மருந்து கலவையை வாழைப்பயிர்கள் மீது தெளிக்க வேண்டும் என்கிற விளக்கத்தையும் அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளுக்கு தெரி வித்தனர்.

    இலைக்கருகல் பாதிப்பால் வாழையின் மகசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால், வாழை பயிர் செய்த விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக இலைக்கருகல் நோய் பாதிப்புக்கு உள்ளான வாழை பயிர் செய்துள்ள விசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

    வாழையில் இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. விவசாயப் பெருமக்கள் தங்களது விவசாயம் சார்ந்த உரிய ஆவணங்களுடன் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் வேளாண் துறையில் மனு கொடுத்து, ஊக்கத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அதேநேரம், தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் ஊக்கத்தொகை சிறிய தொகைதான். இது, அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கி விடாது. அதனால், இதுபற்றி முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

    அதேவேளையில், வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பை சரிசெய்ய வேளாண் அதிகாரிகள் கூறிய வழிமுறைகளை பின்பற்றி வாழைப்பயிர்களை பாதுகாக்குமாறு விவசாயப் பெருமக்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    Next Story
    ×