search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே மனைவி டி-சர்ட் அணிந்ததால் கணவர் தற்கொலை
    X

    பொள்ளாச்சி அருகே மனைவி டி-சர்ட் அணிந்ததால் கணவர் தற்கொலை

    • ஷபி தனது கணவருக்கு டி-சர்ட் அணிந்தபடி இரவு உணவு கொண்டு வந்தார்.
    • டி-சர்ட் அணிந்ததால் 2 பேருக்கும் இடையே தகராறு உருவானது.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியபோதுவை சேர்ந்தவர் சிவஞானசேகர் (வயது 44). அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஷபி (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    சிவஞான சேகர் பொள்ளாச்சி - கிழவன்புதூர் வழித்தடத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் பெரியபோதுவில் பஸ்சை நிறுத்தி விட்டு இரவு பஸ்சிலேயே தூங்குவது வழக்கம். சிவஞான சேகருக்கு அவரது மனைவி இரவு உணவு கொடுத்து விட்டு செல்வார்.

    கடந்த 19-ந் தேதி ஷபி தனது கணவருக்கு இரவு உணவு கொண்டு வந்தார். அப்போது அவர் டி-சர்ட் அணிந்து வந்தார். இதனை சிவஞான சேகர் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவர் மனைவியுடன் பேசாமல் இருந்தார். குழந்தைகளுடன் மட்டும் விளையாடி விட்டு அருகே உள்ள வீட்டில் தூங்க சென்றார். அங்கு தனியாக இருந்த சிவஞான சேகர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட சிவஞான சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×