கூடுதல் வட்டி கேட்டதால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முயற்சி

நண்பர் உள்பட 2 பேரை கைது செய்தனர். குனியமுத்தூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
கூடுதல் வட்டி கேட்டதால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முயற்சி
Published on

கோவை,

கோவை கணபதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 28). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் குனியமுத்தூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவர் தனது கல்லூரி நண்பர் சேவுக பழனி (30) என்பவருக்கு ரூ.3.75 லட்சம் கடன் கொடுத்தார். பின்னர் அந்த பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் நவீன்குமார் பல முறை கேட்டார்.

ஆனால் சேவுக பழனி பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில், தொழிலை மேலும் விரிவு செய்ய நவீன்குமார், சபரிநாதன்(35) என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கினார். வட்டியுடன் சேர்த்து தினசரி அவர் ரூ. 2 ஆயிரத்தை செலுத்தி வந்தார்.ஆனால் சபரிநாதன் கூடுதல் வட்டி கேட்டு தொந்தவு செய்ததாகவும், இல்லையென்றால் ஓட்டலை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கூறியதாக தெரிகிறது. நண்பர் பணம் வாங்கி மோசடி செய்ததாலும், கடன் தொல்லையாலும் அவதிப்பட்டு வந்த நவீன்குமார் மனவேதனை அடைந்தார்.

இந்நிலையில், கடந்த 28-ந் தேதி நவீன்குமார் காரமடையில் வைத்து விஷம் குடித்து மயங்கினார். அவரது நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குரும்பபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் நவீன்குமார் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கூடுதல் வட்டி கேட்டு கொடுமைபடுத்திய மதுக்கரை சீராபாளையத்தை சேர்ந்த சபரிநாதன் (35) மற்றும் நவீன்குமாரிடம் கடன் வாங்கி மோசடி செய்த அவரது நண்பர் பன்னிமடையை சேர்ந்த சேவுக பழனி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com