search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    கோவை,

    வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் கார் குண்டு வெடிப்பு, சமூக விரோத கும்பல் நடமாட்டம், பல்வேறு குற்றவாளிகள் பிடிபட்ட சம்பவங்களை தொடர்ந்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் நகரில் உச்சகட்ட பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகள் உடமைகள், பார்சல்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

    சோதனைக்கு பின்னரே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர், மால்கள், மார்க்கெட், வணிக வளாகம் என மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகள், கடைவீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    அங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் தங்கி இருந்தால் அவர்களின் முழு விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    சுதந்திர தின விழா நடக்க உள்ள கோவை வ.உ.சி பூங்கா போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அங்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். மேலும் டிரோன் காமிரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    விழா நடக்கும் இடங்களிலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×