search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
    X

    சூலூர் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

    • அரசு பஸ்சின் மீது செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே நீலம்பூரில் இருந்து வாளையார் நோக்கி எல் அண்ட் டி புறவழிச்சாலை செல்கிறது.

    இந்த சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம சாலைகளும் உள்ளன. அந்த கிராமங்களில் உள்ளவர்களும் இந்த சாலைக்கு வந்து பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

    நேற்று இரவு காந்திபுரத்தில் இருந்து குளத்தூர் நோக்கி அரசு பஸ் வந்தது. எதிரே புறவழிச்சாலையில் அரசம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது40) என்ற வாலிபர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.

    அரசு பஸ் எல் அண்டி புறவழிச்சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த செந்தில்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த செந்தில்குமாரை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அரசு பஸ்சின் மீது செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது பார்ப்பவர்கள் நெஞ்சை பதை பதைக்கும் வகையில் உள்ளது.

    Next Story
    ×