search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீன்றி கருகிய பயிர்களை மேயவிட்டு கால்நடைகளுக்கு உணவாக்கும் விவசாயிகள்
    X

    தங்கள் கால்நடைகளை நெற்பயிர்களில் மேயவிடும் விவசாயிகள்.

    தண்ணீன்றி கருகிய பயிர்களை மேயவிட்டு கால்நடைகளுக்கு உணவாக்கும் விவசாயிகள்

    • 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மேலபனையூர் ஊராட்சி கமலாபுரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும், இதுவரை இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை வயல்களுக்கு கொண்டு வந்து, அவற்றை நெற்பயிர்களை மேயவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் வேனுகோபால், சரவணன் ஆகியோர் கூறியதாவது,கமலாபுரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விளைநிலங்கள் அய்யனாற்றில் இருந்து பிரிந்து கூழையாறில் வரும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த கூழையாறு தூர்வாரப்படாததாலும் போதுமான அளவில் தண்ணீர் திறந்து விடாததாலும் கமலாபுரம் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

    மேலும், மதகுகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் கூழையாறில் இருந்து வரும் தண்ணீர் பொண்ணு கொண்டான் வடிகாலில் சென்று விடுகின்றன. எங்கள் பகுதி விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி பல ஆண்டுகளாக எட்டாக்கனியாகி உள்ளது.இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் எங்கள் கிராமத்திற்கு காலத்தோடு தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் குறுவை சாகுபடியை தொடங்கினோம்.

    ஆனால் தண்ணீர் இன்றி பயிர்களை மேயவிட்டு கால்நடைகளுக்கு உணவாக்கும் அவலநிலை ஏற்படும் என நினைத்து கூட பார்க்கவில்லை. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×