என் மலர்
ஈரோடு
குன்றிமலை அடிவாரத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு 42 அடி உயரத்திற்கு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.
குன்றி, விளாங்கோம்பை மல்லியம்மன்துர்கம். கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக தண்ணீர் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடையும் வகையில் அணை கட்டப்பட்டு உள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் உதவி பொறியாளர் கல்பனா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குண்டேரிப்பள்ளம் அணையில் பூஜை செய்து தண்ணீர் திறந்து விட்டனர்.
இன்று முதல் ஜூன் 9-ந் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் என்றும் முதலில் 12 நாட்களுக்கும், அதைத்தொடர்ந்து 5 நாட்கள் இடைவெளியில் 10 நாட்கள் வீதம் மொத்தம் 57 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 5 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.
மாநகர் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் சாரல் மழை பெய்தது. அதேபோல் இரவு 7 மணி அளவிலும் லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் பெரிதாக மழை ஏதும் பெய்யவில்லை.
ஆனால் அதே சமயம் புறநகர் மாவட்ட பகுதிகளான தாளவாடியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஆகும் சூழ்நிலை நிலவியது. தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் குண்டேரிபள்ளம், பவானி, மொடக்குறிச்சி, எலந்தகுட்டை, பவானிசாகர் ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
சென்னிமலை பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை மிக கடுமையான கோடை வெயில் அடித்தது மக்கள் தாங்க முடியாத வெப்பத்தில் தவித்தனர். மாலை 6 மணிக்கு வானம் இருண்டு திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது.
இதில், சென்னிமலை அடுத்துள்ள பசுவ பட்டியிலும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது தேவராஜ் என்பவர் தோட்டத்தில் திடீரென விழுந்த இடியில் பச்சை தென்னை மரங்கள் தீ பற்றி எரிந்தது. நல்ல வேளையாக அருகில் வீடு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது. மேலும் மரங்கள் தள்ளித்தள்ளி இருந்ததால் தீ தோட்டம் முழுவதும் பரவாமல் 2 மரங்கள் மட்டும் முழுமையாக பற்றி எரிந்து அணைந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தாளவாடி-13.5, குண்டேரிபள்ளம் 2.6, பவானி - 2.4, மொடக்குறிச்சி -2.2, எலந்தகுட்டை-2.2, பவானிசாகர்-1.






