search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் 104.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு
    X

    ஈரோட்டில் 104.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு

    • கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கோடை காலம் என்பது பொதுவாக ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். கோடை காலம் தொடங்க இன்னும் 1 மாதம் இருக்கும் நிலையில் தற்போதே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது. மேலும் தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 4 வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது. மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் (103.38 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் (104.36 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. மதிய நேரம் வெளியே செல்லும்போது தீப்பிடிப்பது போல் இருப்பதால் மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும், குடை பிடித்த படியும் சென்று வருகின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாள் ஒன்றுக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்து உள்ளனர். இதேபோல் நீர்ச்சத்து ஆகாரங்களை அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்ய போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.

    Next Story
    ×