search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி, மாமனார், மாமியாரை உருட்டு கட்டையால் தாக்கிய வாலிபர்
    X

    மனைவி, மாமனார், மாமியாரை உருட்டு கட்டையால் தாக்கிய வாலிபர்

    • வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம், நவ.23-

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்து (73). அவரது மனைவி பானுமதி (66). இவர்களது மகள் ஜெயகீர்த்தி (36).

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயகீர்த்திக்குக்கும், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (35) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    திருமணமான 3 மாத த்தில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஜெயகீர்த்தி சத்தியமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். உதயகுமார் எடப்பாடியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இரு வீட்டாரும் சமாதானம் பேசி கணவன்-மனைவியை சேர்த்து வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் கணவன்-மனைவி இருவரும் சமரசம் ஆகவில்லை.

    இந்நிலையில் இன்று காலை உதயகுமார் சத்தியமங்கலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு உருட்டுக்கட்டையுடன் வந்தார்.

    வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.எதிர்பாராத இந்த தாக்கு தலால் 3 பேரும் அலறினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உதயகுமார் உருட்டு கட்டையால் தாக்கியதில் முத்து, பானுமதி, ஜெயகிரீத்தி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமனார், மாமியார், மனைவியை மருமகன் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×