என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் கடும் குளிர்-பனிப்பொழிவு
- அம்மாபேட்டை பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
- தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. தாளவாடி மற்றும் பர்கூர் மழைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பவானி, காவிரி ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் குளிர்ச்சியாக மாறியது. வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளிக்கிறது.
தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்யாததால் இரவில் இருந்தே குளிருடன் பனிப்பொழிவும் இருந்து வந்தது. குறிப்பாக அம்மாபேட்டை பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.
இதனால் பவானி-மேட்டூர் செல்லும் மெயின் ரோட்டில் காலை 7 மணி வரை எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரிய வில்லை. இதனால் காலை நேரத்திலும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரிய விட்டு வந்து சென்றது.
கடும் குளிரால் மலை பிரதேசத்தை போல் ஈரோடு மாவட்டம் மாறி விட்டது.






