என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் என்ஜினீயரிங் மாணவர் பலி
- லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அருண்குமார் உயிரிழந்தார்.
- கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கோவை,
விழுப்புரத்தை சேர்ந்தவர் பூவராகவன். இவரது மகன் அருண்குமார் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரியில் படிக்கும் 12 மாணவர்கள் நேர்முக தேர்வுக்காக 6 மோட்டார் சைக்கிள்களில் அன்னூர் கணேசபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சென்றனர். பின்னர் தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அருண்குமார் மாணவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தார்.
மோட்டார் சைக்கிள் குரும்பபாளையம் -காளப்பட்டி ேராட்டில் வந்து கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் விபத்தில் இறந்த அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் அருண்குமாரின் தாய் மற்றும் உறவினர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் மாணவர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவரின் தாயாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.






