search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ரூ.16.56 லட்சம் நிதியில் 47 ஊராட்சி விவசாயிகளுக்கு 27,600 தென்னங்கன்றுகள் வினியோகம்- கலெக்டர் கிராந்திகுமார்பாடி தகவல்
    X

    கோவையில் ரூ.16.56 லட்சம் நிதியில் 47 ஊராட்சி விவசாயிகளுக்கு 27,600 தென்னங்கன்றுகள் வினியோகம்- கலெக்டர் கிராந்திகுமார்பாடி தகவல்

    • கோவை மாவட்டத்தில் 89.927 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு, தமிழகத்தில் முதலிடம் பிடித்து உள்ளது
    • தென்னந்தோப்புகளில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் 14 செயல்விளக்கத்திடல்கள் அமைக்கவும் நடவடிக்கை

    கோவை,

    உலக தென்னை தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் தென்னை சார்ந்த கருத்துக் காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமைதாங்கி தென்னை நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த துண்டு பிரசுரங்களை வெளி யிட்டார். 3 விவசாயிகளுக்கு நானோ உரங்கள் தொகுப்பை வழங்கினார்.

    தென்னை கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில் கூறியதாவது:-

    இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முன்னணி வகித்து வருகின்றன. உலக அளவிலான தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற்று உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 89.927 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு, தமிழகத்தில் முதலிடம் பிடித்து உள்ளது. குறிப்பாக ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தெற்கு, சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது.

    தென்னை மரங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உரங்களை போட்டு நல்லமுறையில் பராமரித்து வந்தால் அதிகமாக காய்களை அறுவடை செய்ய முடியும்.

    கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16.56 லட்சம் நிதியில் 47 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா 600 நெட்டை வீதம் ஒட்டு மொத்தமாக 27 ஆயிரத்து 600 தென்னங்கன்றுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தென்னந்தோப்புகளில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் 14 செயல்விளக்கத்திடல்கள் நடப்பாண்டில் அமைக்கப் பட உள்ளது.தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் சந்தையில் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இதற்காக அரசின் வேளாண்மை சார்ந்த பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வேளாண் இணைஇயக்குநர் முத்து லட்சுமி, துணை இயக்குநர் புனிதா, தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஐரின் வேதமணி, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபிஅகமது, வேளாண் வணிகம் விற்பனைத்துறை துணை இயக்குநர் விஜய கல்பனா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×