search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுரோட்டில் கேக் வெட்டி அட்டகாசம்- பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை
    X

    நடுரோட்டில் 'கேக்' வெட்டி அட்டகாசம்- பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை

    • கவுதம் தரப்பினருக்கும், ஆட்டோ டிரைவர் காமேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ் (வயது25). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு ஒரகடம் அய்யப்பன் தெரு சந்திப்பு அருகே ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் அருகே வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர் நண்பர்களுடன் நடுரோட்டில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    இதனை ஆட்டோ டிரைவர் காமேஷ் கண்டித்தார். மேலும் ஆட்டோ செல்ல வழிவிடுமாறு கூறினார். இதனால் கவுதம் தரப்பினருக்கும், ஆட்டோ டிரைவர் காமேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த கவுதம் தரப்பினர் மறைத்து வைத்துருந்த கத்தி, அரிவாளால் காமேசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த காமேஷ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அலறல் சத்தம்கேட்டு அப்பகுதிக்கு வந்த காமேசின் தம்பி சதீசையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவரது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட காமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த சதீஷ் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கவுதமுடன் அவரது நண்பர்கள் 10 பேர் இருந்ததாக தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்தநாள் கொண்டாடத்தின் போது ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×