என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை வடவள்ளி மருந்து விற்பனை பிரதிநிதி மாயம்
- சிவக்குமார் ஆன்லைனில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
- மனைவி மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள விமல்நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி ராஜஸ்திரிக்கா (35). சிவக்குமார் தொழில் மற்றும் குடும்ப தேவைக்காக ஆன்லைனில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் ரூ.10 லட்சம் வரை பணம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் சிவக்குமார் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது மனைவியிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் சிவக்குமார் தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு தகவல் அனுப்பினார்.
அதில் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளேன். கடனை சமாளிக்க முடியவில்லை. நான் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என அனுப்பி இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜஸ்திரிக்கா கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக கூறியது. இது குறித்து அவர் மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் சுமை காரணமாக மனைவிக்கு தகவல் அனுப்பி விட்டு மாயமான மருந்து விற்பனை பிரதிநிதியை தேடி வருகிறார்கள்.






