search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மூடல்
    X

    ஆத்தூரில் தனியார் பள்ளிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மூடல்

    • சின்னசேலம் வன்முறை சம்பவத்தை கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மூடினார்கள்.
    • குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இன்டர்நேசனல் பள்ளி வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது. குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் பள்ளி முன்பு நிறுத்தியிருந்த காவல் துறையின் பஸ்சை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தடுக்க முயன்ற டி.ஐ.ஜி.பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபிநவ் (சேலம்), செல்வகுமார் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 55 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவித்துள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.பள்ளிகள், இன்டர்நேசனல் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இதில் சேலம் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. அதுபோல் சேலம் புறநகர் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், வீரபாண்டி, ஏற்காடு, கெங்கவல்லி, நங்கவள்ளி, தலைவாசல், பொத்தநாயக்கன் பாளையம், மேச்சேரி, தாரமங்கலம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், காகாபாளையம், இடங்கணசாலை, ஓமலூர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    அதுபோல் நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், குமாரபாளையம், பாண்டமங்கலம், மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    பள்ளிக் கூடங்கள் திறக்கப்படாது என்பது பற்றிய தகவல் முன்கூட்டியே பள்ளி நிர்வாகம் சார்பில் எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அளிக்கப்படாத, தகவல் கிடைக்காத பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளி முன்பகுதி கேட் மூடப்பட்டு, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படாது என நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது. இதனால் பெற்றோர், மாணவ- மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. அதுபோல் ஒரு சில தனியார் பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலை வகுப்புக்காக பள்ளிகள் திறந்திருந்தனர்.

    பல தனியார் பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் பள்ளின்கூட்டங்களை சுற்றிலும் கண்காணித்து வருகின்றன.

    Next Story
    ×