search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பள்ளி வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
    X

    கோவையில் பள்ளி வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
    • அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த பணியானது நடந்து வருகிறது.

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. பிளஸ்-1க்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 6 வரையும், 10-ம் வகுப்புக்கு கடந்த ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி 20-ல் முடிவடைந்தது.

    இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அண்மையில் தேர்வு முடிவுகளும் வெளியாகின.

    தற்போது கோடை விடுமுறை முடிந்து விட்டது. இதனையடுத்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் 14-ந் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    பள்ளிகள் திறப்புக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பள்ளிக்கூட வளாகம், வகுப்பறைகள், மைதானம், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுதவிர பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள், மின் இணைப்புகள் சரிபார்ப்பு, வளாக கட்டிடங்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வகுப்பறையில் இருந்த ஒட்டடை அடிக்கப்பட்டு மேஜைகள் சரி செய்யப்பட்டுள்ளது. கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு பளிச் சென்று காட்சியளிக்கிறது.

    இதேபோல் பள்ளி வளாகத்தில் கிடந்த உடைந்த பொருட்கள், கட்டிட இடிபாடுகளை அகற்றி விசாலாப்படுத்தும் பணியும் நடக்கிறது. மேலும் விளையாட்டு மைதானங்களில் உள்ள சிறு, சிறு பள்ளங்களும் சரி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த பணியானது நடந்து வருகிறது.

    பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு புது அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

    மேலும் பள்ளிக்கூடம் திறக்கும் தினத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×