என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடவள்ளி அருகே ஆசிரியை தாக்கியதில் 8-ம் வகுப்பு மாணவன் படுகாயம்
- 2 மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- பெற்றோர் கழக சங்கத்தினர் இது தொடர்பாக புகார் மனு அனுப்பி உள்ளனர்.
வடவள்ளி,
கோவை ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் மெதுவாக கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு என்று தனியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்பில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 19 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு தினமும் கற்றல் திறனை அதிகரிப்பது மற்றும் பல்வேறு வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று, வழக்கம் போல வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளியில் படித்து வரும் 6-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும், 8-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனை அந்த வழியாக சென்ற ஆசிரியை ஒருவர் பார்த்தார்.
பின்னர் அருகே சென்று 2 பேரிடமும் சமாதானம் பேசியதுடன், 8-ம் வகுப்பு மாணவரை தனது அறைக்கு வந்து சந்திக்குமாறு கூறி விட்டு சென்றார்.
அதன்படி 8-ம் வகுப்பு மாணவரும் அறைக்கு சென்றார்.
அங்கு மாணவனை முட்டி போட வைத்து, பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து மாணவன், தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவனின் பெற்றோரிடம் சமாதானம் பேசி, இனிமேல் இதுபோன்று நடக்காது என தெரிவித்தனர். இதனால் மாணவனின் பெற்றோரும், புகார் கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதற்கிடையே ஆசிரியை மாணவனை தாக்கிய விவகாரம் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனை அறிந்த பெற்றோர் கழக சங்கத்தினர் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து குழந்தைகள் நல வாரியத்திற்கு இன்று புகார் மனு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக குழந்தைகள் நல வாரியம் விசாரணை நடத்தும் என தெரிகிறது.






