என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை: தனியார் நிறுவன ஊழியர் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு - மேலும் 3 பேரை வழக்கில் சேர்க்க கோரிக்கை
    X

    மாயாண்டி

    நெல்லையில் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை: தனியார் நிறுவன ஊழியர் உடலை வாங்க உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு - மேலும் 3 பேரை வழக்கில் சேர்க்க கோரிக்கை

    • நேற்று முன்தினம் இரவு மாயாண்டியை அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (20), அவரது நண்பர்கள் சுடலை கண்ணு, சுடலை மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு, பஸ்சில் ஏறி திருப்பூருக்கு சென்றனர்.
    • விசாரணையில் மாயாண்டியின் வீட்டு முன்பு இருந்த கிரைண்டரை எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 36). இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    வெட்டிக்கொலை

    நேற்று முன்தினம் இரவு இவரை அதே பகுதியை சேர்ந்த சுடலை மகன் கண்ணன் (20), அவரது நண்பர்கள் சுடலை கண்ணு, சுடலை மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு, பஸ்சில் ஏறி திருப்பூருக்கு சென்றனர். அங்கு நேற்று காலை தாராபுரம் போலீசில் சரண் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் மாயாண்டியின் வீட்டு முன்பு இருந்த கிரைண்டரை எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    உடலை வாங்க மறுப்பு

    இதற்கிடையே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டுள்ள மாயாண்டி உடலை அவரது உறவினர்கள் பெற்று அடக்கம் செய்ய இன்று 2-வது நாளாக அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் உறவினர்களான 2 பெண்கள் உள்பட மேலும் 3 பேருடைய தூண்டுதலின் பேரில் தான் இந்த கொலை நடந்துள்ளது.

    எனவே அவர்களையும் இந்த வழக்கில் சேர்த்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று அவர்கள் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×