என் மலர்
உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற போது எடுத்த படம்.
ராணுவ வீரர் குடும்பத்துக்கு பா.ஜ.க. ரூ.10 லட்சம் நிதியுதவி: அண்ணாமலை அறிவிப்பு
- பிரபு மரணத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
- தமிழ்நாடு போலீஸ்துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.
சென்னை :
கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரபு மரணத்தை பத்திரிகைகளும், பா.ஜ.க.வும் கையில் எடுத்தப் பிறகுதான், சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். பிரபு மரணத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
ராணுவ வீரர் பிரபு மரணத்தில் போலீஸ் மெத்தனம் காட்டி இருக்கிறது.
4 நாட்களுக்கு முன்பாக ஒரே நாளில் 9 படுகொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. தமிழ்நாடு போலீஸ்துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. சுதந்திரத்துக்கு பிறகு தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குற்றங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் தன்னுடைய பணியை சரியாக செய்யவில்லை. இதற்கு மத்திய தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்துக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் உடனடியாக ரூ.10 லட்சம் காசோலையை வழங்க உள்ளோம். அவரின் 2 குழந்தைகளின் படிப்புச்செலவையும் ஏற்கிறோம். தொடர்ந்து அவரின் குடும்பத்துக்கு கட்சி அரணாக இருக்கும். பிரபுவின் குடும்பம் எதற்காகவும் பயப்பட தேவையில்லை. இன்றைக்கு நிலைமை மிக மோசமாக இருக்கிறது. மத்திய தேர்தல் ஆணையம் ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்தால், அதை தமிழக மக்கள் வரவேற்பார்கள். ஓட்டுக்காக அங்கே மக்களை பட்டி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள்.
அபிநந்தன் பாகிஸ்தானிடம் மாட்டியபோது அவரை பிரதமர் மோடி தமிழன் என்று பார்க்கவில்லை. இந்தியன் என்று பார்த்தார். 24 மணி நேரத்தில் அபிநந்தனை இந்தியாவிற்குள் விடவில்லை என்றால், எந்த சமாதானமும் இல்லாமல் இந்தியாவின் மொத்த ராணுவமும் உங்களை தாக்குவதற்கு யோசிக்காது என்று எச்சரித்தார். இந்த பேச்சுவார்த்தையை ஐக்கிய அரபு நாடுகள் நடத்தி முடித்தது.
24 மணி நேரத்தில் அபிநந்தனை பாகிஸ்தான் வீரர்கள் பத்திரமாக நம்மிடம் ஒப்படைத்தார்கள்' என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, பா.ஜ.க.வினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மாலை 6 மணியளவில் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரையில் பேரணியாக சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் பிரபுவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.






