search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கூடுதலாக 250 கனஅடி நீர் திறக்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கூடுதலாக 250 கனஅடி நீர் திறக்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை

    • ஏரல் மற்றும் வாழவல்லான் பகுதிகளில் உறை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் குடிதண்ணீர் வற்றி போனது.
    • வாழவல்லான் தடுப்பணை வரை தண்ணீர் வந்து சேர்ந்தால்தான் இந்தப் பகுதிகளுக்கு எல்லாம் குடிதண்ணீர் வழங்க முடியும்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக தற்போது தாமிரபரணி ஆற்றில் மங்கலகுறிச்சியில் உள்ள தடுப்பணையின் கீழ்புறம் உள்ள ஏரல் மற்றும் வாழவல்லான் பகுதிகளில் உறை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் குடிதண்ணீர் வற்றி போனது. இதனால் இங்குள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் தண்ணீர் எடுக்கப்படும் குடிதண்ணீரை பெற்று வந்த ஏராளமான கிராமங்கள் மற்றும் பேரூராட்சி களுக்கு குடிதண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தண்ணீர் திறப்பு

    இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் (நான்), கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் மூலம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து கடந்த 25-ந் தேதி தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விட தேவையான ஏற்பாடுகளை செய்தேன்.

    இந்த தண்ணீரானது மங்கலகுறிச்சி தடுப்பணை வரை வந்ததால் சாயர்புரம், பெருங்குளம் பேரூராட்சி பகுதிகளுக்கும், நட்டாத்தி, திருப்பணி செட்டிகுளம் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கும், திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் ஒரு சில பகுதிகளுக்கும் படிப்படியாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ஆனால் மங்கலகுறிச்சி தடுப்பணைக்கு கீழ்புறம் அமைந்துள்ள வாழவல்லான் தடுப்பணை மூலமாக வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி, அகரம், கொற்கை, பழைய காயல், இடையர்காடு, மாரமங்கலம், கோவங்காடு, கொட்டாரக்குறிச்சி, மஞ்சள் நீர்க்காயல், ஆறுமுகமங்கலம் உள்ளிட்ட 14 கிராம ஊராட்சிகள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 23 டவுன்ஷிப் பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்க முடியவில்லை.

    இது தவிர ஏரல் ஆற்றுப்பகுதியில் இருந்து குடி தண்ணீர் பெற்று வரும் ஏரல் பேரூராட்சி, சிறுத்தொண்ட நல்லூர் மற்றும் சூழவாய்க்கால் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மங்கலக்குறிச்சி தடுப்பணையை தாண்டி வாழவல்லான் தடுப்பணை வரை தண்ணீர் வந்து சேர்ந்தால்தான் இந்தப் பகுதிகளுக்கு எல்லாம் குடிதண்ணீர் வழங்க முடியும். எனவே ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கூடுதலாக 250 கன அடி நீர் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×