search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பேச்சு வார்த்தையில் உடன்பாடு
    X

    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் பேச்சு வார்த்தையில் உடன்பாடு

    • அதிகபட்சமாக ரூ.7000-7400 வரை கிடைக்கும்
    • ரூ.14 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு

    கோவை,

    தமிழகம் முழுவதும் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு டான்டீ தேயிலை தோட்டங்கள் மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன.

    அவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை கடந்த 2 வாரமாக நடைபெற்று வந்தது. இதில் தற்போது உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.

    பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் தரப்பில் அண்ணா தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் வால்பாறை

    வீ.அமீது, எல்.பி.எப்.சவுந்தர பாண்டியன், வினோத், ஏ.ஐ.டி.யு.சி. மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வீரமணி, செல்வகுமார், ஐ.என்.டி.யு.சி. கருப்பையா, ஆனைமலை ஒர்க்கர்ஸ் யூனியன் வர்க்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    நிர்வாகம் தரப்பில் துணை தலைவர் பாலசந்தர், (உப்ரியார் குரூப்), குரூப் மேலாளர் ரஞ்சித் கட்டபுரம், துணை தலைவர் முரளி பாரிக்கர், (பாரி அக்ரோ), திம்பையா (முடீஸ்), ஆனை மலை தோட்ட அதிபர்கள் சங்க தலைவர் ரஞ்சித்குமார், செயலாளர் பர்தோஸ், விஜயன், (கருமலை), ராஜ்மோகன் (வாட்டர்பால்), குரூப் மேலாளர் அக்ஷயா, (டாடா காபி), சட்ட ஆலோசகர் பிரகாஷ் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

    அதன்படி உப்ரியார் (ஸ்டான் மோர் குரூப்), பாரி அக்ரோ (அய்யர் பாடி குரூப்), முடீஸ் குரூப், டாடா காபி, சோலையாறு (ஜெய ஸ்ரீ), கருமலை ஆகிய எஸ்டேட்களில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட் டுள்ளது.

    இது போல் வாட்டர்பால் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு 10 சதவீதம், கவர்கல் எஸ்டேட் தொழிலாளர்க ளுக்கு 9 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு அதிகபட்ச மாக ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 400 வரை போனஸ் கிடைக்கும். போனஸ் பட்டு வாடாவை உடனே தொடங்கி நாளை மறுநாளுக்குள் (செவ்வாய்க் கிழமை) வழங்கி முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மொத்தமாக சேர்த்து ரூ.14 கோடியே 70 லட்சம் போனஸ் வழங்கப்பட உள்ளதாக எஸ்டேட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×