என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் - மாவட்ட செயலாளர் அறிக்கை
- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம் மட்டும் பின்னர் வந்த அரசால் கைவிடப்பட்டது.
- 2014-ம் ஆண்டு ரூ.42 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணி நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டது.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காமராஜர் ஆட்சிக் காலத்தில் ராமநதி அணை, கடனாநதி அணை, ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம் மட்டும் பின்னர் வந்த அரசால் கைவிடப்பட்டது. 2005-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் ரூ.3.64 கோடி நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு தமிழக அரசு விதி எண் 110 கீழ் ரூ.42 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணி நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2020 -ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் பணியை முழுமையாக முடிக்க ரூ.41½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.
பின்னர் ஆட்சி மாற்றத்தின் காரணமாக தற்போது தி.மு.க. அரசு அந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது என்றும் அதேபோல் சுரண்டை இரட்டை குளம் முதல் ஊத்துமலை வழியாக புதிய கால்வாய் அமைக்கும் திட்டமும் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு தற்போது அரசு இந்த திட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
எனவே ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தையும் சுரண்டை இரட்டைக் குளம் கால்வாய் திட்டத்தையும் நிறைவேற்ற கோரி அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அனை வரையும் ஒன்று திரட்டி நாளை பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.






