search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் தகராறு செய்த மருமகனை உருட்டு கட்டையால் தாக்கிய அ.தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
    X

    குடிபோதையில் தகராறு செய்த மருமகனை உருட்டு கட்டையால் தாக்கிய அ.தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்து தலைவர்

    • குடித்து விட்டு வந்து மகளை தாக்கியதால் ஆத்திரம்
    • தாக்கியவரே மருமகனை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 50). அ.தி.மு.க. பிரமுகரான இவர் வெள்ளாம்பாளையம் பஞ்சாயத்தில் முன்னாள் தலைவராக இருந்தார்.

    இவரது மகள் மெய் மொழி (24). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழனிகவுண்டன் புதூரை சேர்ந்த விவசாயி பிரகாஷ்குமார் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற பிரகாஷ்குமார் மது போதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மெய்மொழியை தாக்கினார்.

    இது குறித்து அவர் தனது தந்தை முருகவேலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அவரது மனைவி கலைவாணி என்பவருடன் மகளின் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் முருகவேல் அவரது மகளை தாக்கியது குறித்து மருமகன் பிரகாஷ்குமாரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரகாஷ்குமார் மாமனார், மாமியார் ஆகியோரை தாக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேல் அங்கு இருந்த உருட்டு கட்டையால் பிரகாஷ்குமாரின் தலை மற்றும் கையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் அவர்களே பிரகாஷ்குமாரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மருமகனை தாக்கிய அ.தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×