கோவையில் போலி நகையை கொடுத்து பெண்ணிடம் ரூ.80 ஆயிரம் அபேஸ்

குறைந்த விலையில் தங்கம் இருப்பதாக கூறி மோசடி 3 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு
கோவையில் போலி நகையை கொடுத்து பெண்ணிடம் ரூ.80 ஆயிரம் அபேஸ்
Published on

கோவை,

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பாத்திமா( வயது48). நோட்டு புத்தக கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் சிவானந்த காலனி 5-ம் நம்பர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் அங்கு வந்தனர். அவர்கள் பாத்திமாவின் அருகே சென்று தங்களிடம் குறைந்த விலையில் தங்கம் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் உடனடியாக தங்க நகை தருவதாக கூறினர்.

முதலில் அவர்கள் 5 பவுன் தங்க நகையை ரூ.50 ஆயிரத்துக்கு தருவதாக கூறினர். இதனை உண்மை என நம்பிய பாத்திமா நகை வாங்க ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் மேலும் அவர்கள் இன்னும் தங்களிடம் 5 பவுன் தங்க நகை இருக்கிறது. மொத்தமாக ரூ.1.50 லட்சம் கொடுத்தால் நகைகள் அனைத்தும் தருவதாக கூறி ஆசை வார்த்தை கூறினர்.

ஆனால் பாத்திமா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி ரூ.80 ஆயிரத்துக்கு 10 பவுன் தங்க நகைகள் தருவதாக கூறியுள்ளனர்.

பாத்திமா அவர்களிடம் ரூ.80 ஆயிரம் பணம் கொடுத்தார். 3 பெண்களும் அவர்களிடம் இருந்த நகையை கொடுத்து விட்டு பணத்தை வாங்கி சென்றனர்.

பின்னர் பாத்திமா நகை அடகு கடைக்கு சென்று தங்க நகையை பரிசோதித்து பார்த்தார். அப்போது அது போலி நகைகள் என்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com