search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீளமேடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி
    X

    பீளமேடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி

    • கணவர் கண்முன்பு காயத்துடன் உயிருக்கு போராடிய மனைவி பலியானார்.
    • விபத்தை ஏற்படுத்தியதாக சின்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பீளமேடு

    கோவை கணபதி பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது72). இவரது மனைவி ராஜாமணி(65).

    கணவன், மனைவி 2 பேரும் இன்று காலை சிங்காநல்லூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி தேவராஜ் கணபதியில் உள்ள வீட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூருக்கு புறப்பட்டார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் அவினாசி ரோட்டில் டைடல் பார்க் அருகே வந்து கொண்டிருந்தது. தேவராஜ் தனது வாகனத்தை வலதுபுறமாக திருப்பி கொண்டிருந்தார்.

    அந்த சமயம் பீளமேட்டில் இருந்து வந்த வாடகை கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த தேவராஜூம், அவரது மனைவி ராஜாமணியும் தூக்கி சாலையில் வீசப்பட்டனர்.

    2 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் ஓடி வந்து, காயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். படுகாயம் அடைந்த தேவராஜ் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும், கிழக்கு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து இறந்த ராஜாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சின்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×