என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றுப்பாலத்தில் தூங்கிய வாலிபர் தவறி விழுந்து சாவு
- ஆற்றுப்பாலத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
- வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி கீழ் பாதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் தினேஷ் (வயது 23). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ் வேலை முடிந்ததும், வீட்டுக்கு செல்லும் வழியில் மானங்கொண்டான் ஆற்றுப்பாலத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் நண்பர்கள் சென்ற பிறகு, தினேஷ் அந்த ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது தூங்கிவிட்டார்.
இந் நிலையில் அவர் ஆற்றில் தவறி விழுந்தார். இதில் ஆற்றில் மூழ்கி தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலையில் அவரது குடும்பத்தினர் தேடியபோது தினேஷ் ஆற்றில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து வேதாரண்யம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தினேஷின் உடல் மீட்கப்பட்டு, வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






