நெல்லை நீதிமன்ற வளாகத்தில் அரிவாளுடன் நுழைந்தவரால் பரபரப்பு

நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் பகுதியில் இன்று ஒரு நபர் சந்தேகப்படும்படியாக உள்ளே நுழைந்தார். பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் அரிவாளுடன் நுழைந்தவரால் பரபரப்பு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இங்கு உரிமையியல், குற்றவியல், நிரந்தர மக்கள் நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன.

முக்கியமான கொலை உள்ளிட்ட வழக்குகளின் போது இங்கு அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். மற்ற நேரங்களில் குறைந்த அளவு போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள்.

அரிவாளுடன் நுழைந்த நபர்

இந்நிலையில் இன்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் பகுதியில் ஒரு நபர் சந்தேகப்படும்படியாக உள்ளே நுழைந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் அரிவாள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவர் நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவர் எதற்காக நீதிமன்றத்திற்குள் அரிவாள் கொண்டு வந்தார்? ஏதேனும் சதி திட்டத்துடன் கொண்டு வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com