search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் 20 வயது மூத்த நபரை மணந்த கல்லூரி பேராசிரியை
    X

    கோவையில் 20 வயது மூத்த நபரை மணந்த கல்லூரி பேராசிரியை

    • கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த இளம்பெண் மெடிக்கலுக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • சம்பவம் குறித்து, பெற்றோர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

    பொள்ளாச்சி,

    காதலுக்கு வயதில்லை. இருவரின் மனமும் ஒத்துப்போனால் யார் வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்பார்கள். அப்படி 20 வயது மூத்த நபரை காதலித்து கரம்பிடித்துள்ளார் கோவையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர்.

    கோவை பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் அங்குள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இது தவிர அந்த பகுதியில் உள்ள மெடிக்கல்லில் பகுதி நேரமாகவும் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது, இளம்பெண்ணுக்கும், கடையின் உரிமையாளருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

    ஆனால் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவில்லை. இளம்பெண் நீண்ட நேரம் போனில் பேசியதை கேட்டபோதும், வேலை விஷயமாக பேசுவதாக தெரிவித்து வந்தார். கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த இளம்பெண் தனது தாயிடம் தான் மெடிக்கலுக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர், இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவரும் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது தாய் போன் செய்தார். அப்போது அவர், தான் மருந்தகத்தின் உரிமையாளருடன் வேலை விஷயமாக சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறேன். வேலை முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவேன் என தெரிவித்தார்.

    வேலை விஷயமாக செல்வதாக கூறியதால் அவர்களும் விட்டு விட்டனர். 2 நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து மீண்டும் தங்களது மகளுக்கு போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பெற்றோர் பதறி போனார்கள்.

    உடனடியாக சம்பவம் குறித்து, பெற்றோர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வந்தனர்.

    இதற்கிடையே மாயமான இளம்பெண் தான் வேலை பார்த்து வந்த மருந்தகத்தின் உரிமையாளரை திருமணம் செய்து கொண்ட தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் சென்னையில் உள்ளனரா அல்லது வேறு எங்காவது தங்கி இருக்கின்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×