2024 புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை- கோவில்களில் சிறப்பு பூஜை

வேளாங்கண்ணி, சாந்தோம் தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை.வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை.
2024 புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை- கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

2024 ஆங்கிலப்புதாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க சென்னையில் பொதுமக்கள் நள்ளிரவு பொது இடங்களில் கூடினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதேபோல் புதுச்சேரியிலும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றனர். Happy New Year என கோசமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புத்தாண்டையொட்டி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேவாலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஈரோட்டில் தேவாலயத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டையொட்டி இந்து கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

கோவை புளியங்குடி முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதுச்சேரியில் கடற்கரையில் நள்ளிரவு 1.30 மணிக்குப் பிறகும் சுற்றுலா பயணிகள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com