search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் விசாரணை
    X
    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணைக்கு பயந்து மோதிரங்களை விழுங்கிய தொழிலாளி- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    திருப்பூரில் போலீஸ் விசாரணைக்கு பயந்து மோதிரங்களை விழுங்கிய தொழிலாளிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் மேம்பாலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி காஜா(வயது45), சதாம் உசேன், உதயகுமார் உள்பட 4 பேர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த காஜா, உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சதாம் உசேனை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த சதாம் உசேன் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காஜா, உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை போலீசார் ஜீப்பில் ஏற்றி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அப்போது காஜா போலீஸ் விசாரணைக்கு பயந்து திடீரென தான் அணிந்திருந்த 2 மோதிரங்களை கழற்றி விழுங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×