search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    திருச்செந்தூரில் வாலிபரை வெட்டிக்கொன்று மண்ணில் புதைத்த நண்பர்கள்

    திருச்செந்தூரில் மதுகுடிக்க அழைத்து வாலிபரை வெட்டிக்கொன்று மண்ணில் புதைத்த நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் வாசகம் இவரது மகன் மதன்குமார் (வயது 21). இவரும், ஆலந்தழை தெற்குத்தெருவை சேர்ந்த லியோ(30), தாளமுத்து நகரை சேர்ந்த மல்லையா(30), திரேஸ்புரத்தை சேர்ந்த மரிய அந்தோணி(29) ஆகியோரும் நண்பர்கள், இவர்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து மீன் பிடிக்க செல்வது வழக்கம்.

    நேற்று மாலை மதன்குமாரை அவரது நண்பர்கள் மது குடிக்க அழைத்து சென்றுள்ளனர். இரவு வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் மதன்குமாரின் பெற்றோர் திருச்செந்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

    இதற்கிடையே மதனை கொலை செய்து தூத்துக்குடி என்.முத்தையாபுரத்தில் காட்டுப்பகுதியில் புதைத்து விட்டதாக அவரது நண்பர்கள் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பியுள்ளனர்.

    இதையடுத்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி லியோ, மல்லையா, மரிய அந்தோணி ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் 3 பேரும் சேர்ந்து மதனை கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களை மதன் உடலை புதைத்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:- லியோவின் மனைவியை மதன் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார். இதனை லியோ கண்டித்துள்ளார். நேற்றும் லியோவின் மனைவியை மீண்டும் அவர் கிண்டல் செய்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லியோ தனது நண்பர்களான மல்லையா மற்றும் மரிய அந்தோணிஆகியோருடன் சேர்ந்து மதனை மது குடிக்க அழைத்துள்ளார்.

    பின்னர் 4 பேரும் என்.முத்தையாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு மது குடிக்க சென்றுள்ளர். அங்கு மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் இருந்த மதனை 3 பேரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அங்கு குழி தோண்டி அவரது உடலை புதைத்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாசில்தார் முன்னிலையில் வாலிபர் உடலை தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×