search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    வாலிபரை கொலை செய்ய முயன்ற மதுரை கூலிப்படை கும்பல் உள்பட 6 பேர் கைது

    வாலிபரை கொலை செய்ய முயன்ற மதுரை கூலிப்படை கும்பல் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25) என்பவரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களுக்கும் அதே மார்க்கெட்டில் வேலை பார்த்த குரு என்ற குமரகுரு (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும் மாலையில் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது.

    இதனையடுத்து அஜித்தை தீர்த்து கட்ட குமரகுரு முடிவு செய்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு குல்லிசெட்டிபட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவுக்கு அருண்குமார் தீச்சட்டி எடுக்கப்போவதாகவும், அதற்கு வருமாறு குமரகுருவை அழைத்துள்ளார்.

    விழாவுக்கு தனது நண்பர்களுடன் வந்த குமரகுரு ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது அஜித்தின் கார் மற்றும் பைக் ஆகியவற்றை அடித்து நொறுக்கி அங்கிருந்த வீட்டின் மீது பீர் பாட்டிலை உடைத்து சேதப்படுத்தினர்.

    அந்த சமயத்தில் அஜித் வீட்டில் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ஒரு கும்பல் வீடு மற்றும் வாகனங்களை சேதப்படுத்துவதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். குமரகுருவின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேடி வந்தனர். இதனிடையே அவர் மதுரையில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை தத்தனேரியைச் சேர்ந்த செல்வம் மகன் பிரசாத் (24), அபுதாகிர் மகன் இப்ராஹிம் (25), சுப்பிரமணி மகன் கல்யாண சுந்தரம் (27), பாலசுப்பிரமணி மகன் இளையராஜா (24) என தெரிய வந்தது.

    இவர்கள் மதுரை மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கில் அருண்குமார் மற்றும் அவரது உறவினரான சஞ்சய் (24) ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் 6 பேரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான குமரகுரு சென்னைக்கு தப்பிச் சென்று விட்டதாகவும், அங்கே போலீசார் விரைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்த நிலக்கோட்டை போலீசாரை மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் பாராட்டினார்.

    Next Story
    ×