என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் குட்டிகளுடன் சுற்றி திரியும் காட்டு யானைகள்
ஊட்டி:
சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வனத்தில் வறட்சி நிலவுகிறது.
இது வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தை சுற்றி உள்ள வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் குன்னூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்து உள்ளன.
இவை கடந்த ஒரு வார காலமாக ரன்னிமேடு, காட்டேரி, கிளண்டேல் போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ளன. குறிப்பாக தேயிலை தோட்டங்கள் மற்றும் சோலை மரக்காடுகளில் உலா வருகின்றன.
இந்த நிலையில் குன்னூர் அருகேயுள்ள கரும்பாலம் பகுதியில் வனப்பகுதி ஒட்டியுள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டுள்ளன.
இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. மேலும் குடியிருப்பு பகுதி அருகே யானைகள் நிற்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் அச்சத்துடன் உள்ளனர்.
தொடர்ந்து இரவு பகல் பாராமல் தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் புதர் சூழ்ந்த பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை கூட்டம் மீண்டும் புதர் சூழ்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






