என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயமடைந்த ஆசிரியை ரேகா
    X
    காயமடைந்த ஆசிரியை ரேகா

    நடுரோட்டில் ஆசிரியையை கத்தியால் வெட்டிய மாணவன்- விருத்தாசலத்தில் பரபரப்பு

    விருத்தாசலத்தில் நடுரோட்டில் ஆசிரியையை, மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காட்டுக்கூடலூர் ரோடு, திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் சரவணகுமார். இவருடைய மனைவி ரேகா (வயது 42). இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கூடத்தின் அருகிலேயே வீடு இருப்பதால், ரேகா தினசரி பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்ற ரேகா, மதிய உணவு இடைவேளையின்போது சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றார். பின்னர் சாப்பிட்டு முடித்ததும், வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு நடந்து சென்றார்.

    அப்போது அப்பகுதியில் பள்ளி சீருடையில் பதுங்கி இருந்த 18 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன், திடீரென தான் கையில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் நடுரோட்டில் வைத்து ரேகாவின் தலையில் வெட்டினார். இதில் வலி தாங்க முடியாமல் ரேகா கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    அதற்குள் அந்த மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து பொதுமக்கள், காயமடைந்த ஆசிரியை ரேகாவை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதன் அடிப்படையில் ஆசிரியையை கத்தியால் வெட்டிய மாணவன் யார்? என்று விசாரணை நடத்தி வருவதுடன், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×