என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை அருகே நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றிய போது எடுத்த படம்.
கோவில் கும்பாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே நல்லாங்குடி கிராமத்திலுள்ள வேம்புடைய அய்யனார், கருப்பர், காளியம்மன், அக்னி காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் நல்லாங்குடி, வெளிமுத்தி, இரவுசேரி, சாத்திக் கோட்டை, தளக்காவயல் மற்றும் நூற்றுக்கும் மேற் பட்ட கிராம மக்களுக்கு குல தெய்வமாக இருந்து வருகிறது. கோவிலில் வேம்புடைய அய்யனார், காளியம்மன், கருப்பருக்கு விமான கோபுரமும் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புதியதாக சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது.
இந்த திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 12ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து இன்று காலை 4ம் கால யாகபூஜை, தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி தொடர்ந்து காலை 5மணியளவில் அக்னி காளியம்மன் ஆலயத்தில் கலசங்களுக்கு புனிதநீர் சிவாச்சாரியார்கள் ஊற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு யாக சாலையில் இருந்து மேள தாளத்துடன் சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களுடன் காலை 6மணிக்கு புறப்பாடாகி 6.50மணியளவில் கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதியில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகமும் நடைபெற்று அனைவருக்கும் பிரசாதங்களும், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






