என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
முதலில் அவர் கரூர் புதிய பஸ் நிலையம் ரவுண்டானா அருகே கரூர் மாநகராட்சி வேட்பாளர்களை ஆதரித்து திரண்டிருந்த மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றவாறு பேசியதாவது:-
இங்கு திரண்டுள்ள மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நீங்கள் அனைவரும் மிகப்பெரிய எழுச்சியோடும், சிரித்த முகத்தோடும் வந்துள்ளீர்கள் என்பதை அறிய முடிகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் துவங்கினேன் தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை எனது சொந்தத் தொகுதியான சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் நேற்று துவங்கினேன். சென்னைக்கு வெளியே முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் பிரசாரத்தை துவங்கியுள்ளேன்.
கரூர் மாவட்டத்திற்கு தி.மு.க.வுக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனென்றால் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் தான் முதல் முதலில் தி.மு.க. தலைவர் கலைஞர் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட சபைக்கு சென்றார்.
தி.மு.க. அரசு பொறுப் பேற்றபோது கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு படுக்கை வசதிகள் தட்டுப்பாடு இருந்தது. இதனை சிறப்பாக கையாண்டு முறையாக அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் 3-வது அலையை எளிதாக கடந்து இருக்கிறோம்.

இரண்டாவது அலையை எதிர்கொண்டு அதிலிருந்து வெற்றிகரமாக நாம் மீண்டதால் கொரோனா மூன்றாவது அலையை எளிதில் தடுத்து நிறுத்திவிட்டோம்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறை வேற்றி வருகிறோம். முதலில் கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்தோம். அதன்படி இரண்டு தவணைகளாக ரூ.4 ஆயிரம் வழங்கினோம்.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றோம். அதன்படி லிட்டருக்கு ரூ.3 குறைத்தோம். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலையை குறைத்தோம். பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டத்தை அமல் படுத்தினோம். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி வரை 46 லட்சத்து 16 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர்.
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்கள் கல்வி இடை நிற்றலை தடுக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமல்படுத்தி நிறைவேற்றி வருகிறோம். நம்மைக்காக்கும் 48 என்ற திட்டம் மூலம் விபத்து நடந்த 24 மணி நேரத்தில் மீட்கப்படும் நபருக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மின்னகம் அமைக்கப்பட்டு மின் நுகர்வோர்கள் சேவை மையத்தை தொடங்கி அதன் மூலம் 24 மணி நேரமும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
தேர்தலில் வெற்றிபெற்று முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டு நமது தலைவர், முதல் மக்கள் சந்திப்பிலேயே தி.மு.க. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காதவர்களும் வருத்தப்படும் அளவுக்கு நல்லாட்சியை தருவோம் என்றார்.
ஒரு வட மாநில ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் சமீபத்திய கருத்து கணிப்பில் இந்தியாவில் நம்பர் ஒன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அறிவிக்கப்பட்டது. இது பெரிய விஷய மல்ல, தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சியில் நமது தலைவர் செயல்படுத்தி வருகிறார்.
நேற்றைய நாள் மிகவும் முக்கியமான நாளாகும். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இதற்காக தமிழக சட்டசபையில் நீட் தேர்வு ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அந்த மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல் 180 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய ஒரு வார காலத்திற்குள் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்வை ரத்து செய்யும் சிறப்பு மசோதாவை நிறை வேற்றி மீண்டும் தமிழக ஆளு நருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் நீட் தேர்வு ரத்து ரகசியம் உதயநிதிக்கு தெரியும் என்று கூறியுள்ளார். இப்பொழுது இந்தக்கூட்டத்தில் நான் அந்த ரகசியத்தை தெரிவிக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். தமிழகத்தில் உள்ள ஆளுநர் நினைப்பதைப் போல இது அ.தி.மு.க. அடிமை ஆட்சி இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சி. தமிழகத்தில் சமூக நீதி காத்த கலைஞர் வழிவந்த ஸ்டாலின் ஆட்சி. நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி சட்டப் போராட்டத்தை மேற் கொள்வோம்.
கரூர் மாவட்டத்திற்கு இந்த தி.மு.க. ஆட்சி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின்கீழ், பெறப்பட்ட 50 ஆயிரத்து 531 மனுக்களில் 50 ஆயிரத்து 225 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணமாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 526 பேருக்கு ரூ.126 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5008 பேருக்கு ரூ.5.6 கோடியில் தையல் எந்திரங்கள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 721 பேர் பயனடைந்து உள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் 4 ஆயிரம் பேருக்கு ரூ.2 கோடியில் உதவிகள், முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடியில் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
உழவர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.1.96 கோடி, இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தில் ரூ.1.27 கோடியில் 27 ஆயிரம் பேருக்கு சான்றிதழ்கள், ரேசன்கார்டுகள் 17 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறை சார்பில் 4288 புகார் கள் பெறப்பட்டு, அதில் 4280-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
திமுக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து வைக்க வேண்டும். இன்றைய தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல். ஏனென்றால் கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தேர்தல் நடை பெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் வெற்றியை பெற்று தந்தது போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும். மக்களிடத்திலே பிரசாரம் மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து அவர் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே புகழுர், பள்ளப்பட்டி நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், கிருஷ்ணராயபுரத்தில் கிருஷ்ணராயபுரம், புலியூர், உப்பிடமங்கலம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், குளித்தலை பேருந்து நிலையம் அருகே குளித்தலை நகராட்சி, மருதூர், நங்கவரம் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். அவருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்றார்.
இதையும் படியுங்கள்... கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை?- அமைச்சர் பதில்






