search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு வழங்கலாம் - எடப்பாடி பழனிசாமி

    அ.தி.மு.க. அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை பெறுங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

    தாம்பரத்தை அடுத்த சேலையூர் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தாம்பரம் மாநகராட்சி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாநகராட்சி. முதல் வெற்றி அ.தி.மு.க. வெற்றியாக இருக்க வேண்டும்.கழக நிர்வாகிகள் வெற்றிக்காக உழைக்க வேண்டும், ஒற்றுமை மிகவும் முக்கியம் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூட வேண்டும் சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். அதனால் மனம் தளராமல் அ.தி.மு.க. வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். ஸ்டாலின் பல பொதுக்கூட்டங்களில் பேசும்போது அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

    அ.தி.மு.க. செயல்படுத்திய திட்டங்கள் தான் தற்போது முதல்வர் திறந்து வைத்து வருகிறார். இது நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது போல் உள்ளது.

    ஸ்டாலின் பேசும் போதெல்லாம் தி.மு.க. 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பொய் பேசுகிறார். ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு வழங்கலாம்.

    ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. ஆனால் 70 சதவீதம் இடைவிடாது உள்ளதாக பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த 525 வாக்குறுதிகளில் 70 சதவீதம் என்றால் 400-க்கு மேல் செய்திருக்க வேண்டும் அப்படி எங்கு என்ன செய்துள்ளார்கள்.

    மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள் கொடுத்தார்களா? நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார். ஏதாவது செய்தாரா? டீசல் விலையை குறைப்பேன் என்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன் என பொய் பிரசாரம் செய்கிறார்.

    எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் கேட்டால் நாங்கள் ஆட்சிக்கு பொறுப்பு ஏற்று சிறிது காலம் தானே ஆகிறது என கூறுகிறார்கள்.

    விளையும் பயில் முளையிலேயே தெரியும். இந்த ஆட்சி சவல குழந்தை மாதிரி எங்கே எழுந்து நடக்க போகுது.

    கீ கொடுத்தால் கைதட்ட கூடிய பொம்மை போல் செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின்.

    முக ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின் 2021 பொது தேர்தலின் போது நீட் தேர்வு பற்றி பேசியபோது ஆட்சி யாளர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்நால் நீட் தேர்வை ரத்து செய்திருக்க வேண்டும் என்று பேசினார்.

    தற்போது தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்தார்களா மேலும் உதயநிதி பேசும்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ஒரு ரகசியம் உள்ளதாக தெரிவித்தார்.

    ஆனால் இன்று அவரை ஆளையே காணவில்லை. அவர் கூறிய ரகசியத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியது தானே? நீட் என்ற பெயரை கொண்டு வந்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான் ஆதாரம் உள்ளது.

    குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் தருவதாக ஸ்டாலின் கூறினார். அதனை கொடுக்கவில்லை.

    தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் அ.தி.மு.க.வினர் ஆக இருக்கவேண்டும் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி தாம்பரம் மாநகராட்சி அ.தி.மு.க.வின் கோட்டை என நிரூபிக்க வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    முன்னதாக பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங், தாம்பரம் நகர செயலாளர் கூத்தன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஜெய்பிரகாஷ், அப்பு என்கிற வெங்கடேசன், கோபி, மாவட்ட மாணவரணி செயலாளர் சாந்தகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு வானகரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அ.தி.மு.க. கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அது போன்று யாரும் தோல்வியை தழுவிவிடக்கூடாது. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். அ.தி.மு.க. அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை பெறுங்கள்’’ என்று கேட்டுக் கெண்டார்.

    Next Story
    ×