search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 227 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ந்தேதி சேலத்தில் பிரசாரத்தை தொடங் கினார்.

    பின்னர் மறுநாள் சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதரவு திரட்டினார்.

    இதைத்தொடர்ந்து சென்னையில் நேற்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.முக. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட சாதனைகளை விளக்கி கூறி அவர் பேசினார்.

    இன்று 2-வது நாளாக சென்னை மாநகராட்சி வேட்பாளர்களுக்கும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிர சாரம் செய்தார்.

    செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி வேட்பாளர்கள் 70 பேரை ஆதரித்து அவர் பேசினார். சேலையூர் கேம்ப் ரோட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 70 வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமணமண்டபத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டங்களில் உள்ள திருமழிசை பேரூராட்சி, பூந்தமல்லி நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டல அ.தி.மு.க. வேட்பாளர்களும் பங்கேற்கின்றனர். இவர்களை ஆதரித்தும் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    இதே போல் ஆவடி மாநகராட்சி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் மண்டல அ.தி.மு.க. வேட்பாளர்களும், திருநின்றவூர் நகராட்சி வேட்பாளர்களும், வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார்.

    இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 227 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம், அம்பத்தூர் மண்டலங்களைச் சேர்ந்த 28 வேட்பாளர்களும், ஆவடி மாநகராட்சியில் போட்டியிடும் 48 வேட்பாளர்களும், திருமழிசை நகராட்சியில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும், திருநின்றவூர் நகராட்சியில் போட்டியிடும் 27 வேட்பாளர்களும், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் களம் இறங்கியுள்ள 21 வேட்பாளர்களையும் ஆதரித்து எடப்பாடி பழனிசாமி  பிரசாரம் செய்கிறார்.

    இதையொட்டி ஸ்ரீவாரு மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து இருந்தனர். மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் பெஞ்சமின், அலெக்சாண்டர், ஜே.சி.டி. பிரபாகர், அப்துல் ரகிம், இ.சி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த இந்த இரண்டு கூட்டங்களையும் முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் சென்று காஞ்சிபுரம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த கூட்டம் இன்று மாலையில் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    Next Story
    ×