search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளி கொலையில் 3 வாலிபர்கள் கைது

    தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளி கொலையில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்லகண்ணு (வயது20). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 3 பேர் செல்லக்கண்ணுவின் செல்போனை பறித்து சென்றனர். உடனடியாக செல்லக்கண்ணு மற்றும் அவரது நண்பர்கள் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட நபரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த அந்த நபர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த நபர் பிணமாக கிடந்தார்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் ஜார்கண்ட் மாநிலம் விஜயகிரி அருகே உள்ள புருகட்டு பகுதியை சேர்ந்த நமன்முண்டா (வயது39) என்பது தெரியவந்தது.

    மேலும் செல்லக்கண்ணு மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அவரை அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், செல்லக்கண்ணு மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சேகர் (19), மொட்டைசாமி (27) ஆகியோரை கைது செய்தனர்.

    அப்போது செல்லக்கண்ணு போலீசில் தெரிவித்ததாவது:-

    எனது செல்போனை நமன்முண்டா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து பறித்துக்கொண்டு சென்றனர். உடனே நாங்கள் 3 பேரும் அவர்களை விரட்டி சென்றோம். அதில் நமன்முண்டா மட்டும் எங்கள் பிடியில் சிக்கினார்.

    அவரை ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கினோம். பின்னர் அங்கிருந்து சென்று விட்டோம். அதன் பின்னரும் எங்களுக்கு ஆத்திரம் தீரவில்லை. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்ததை அறிந்த நாங்கள் அங்கு சென்றோம்.

    சிகிச்சை முடிந்து இரவு ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய அவரை நாங்கள் 3 பேரும் அழைத்து சென்று அவரது கை, கால்களை கட்டி போட்டு சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் உயிரிழந்து விட்டார்.

    அதன் பின்னர் நாங்கள் தப்பிப்பதற்காக அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் அருகிலேயே அவரது உடலை வீசி சென்றோம்.

    இவ்வாறு அவர்கள் வாக்கு மூலத்தில் தெரிவித்தனர்.

    Next Story
    ×