search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு - 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு

    கோவையில் தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    பல்லடம்:

    கூலி உயர்வு கோரி திருப்பூர், கோவை மாவ ட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகளை கடந்த 9-ந்தேதி முதல் நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    பல்லடம் ரகத்துக்கு 20 சதவீதமும், சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதமும் கூலி உயர்வு தர ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் தொழில் நிலவரம் சரியில்லாத காரணத்தால் தற்போது 10 சதவீதம் கூலி உயர்வும், பின்னர் மீதியும் தருவதாகத் தெரிவித்தனர். அதனை விசைத்தறியாளர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோவையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அதில் திருப்பூர், கோவை மாவட்டம், பல்லடம், சோமனூர், திருப்பூர், அவிநாசி பகுதியை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில்:

    தற்போது விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலில் உற்பத்தி செலவை காட்டிலும், துணி விற்பனை விலை குறைவாக இருப்பதால் தொழில் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே தங்களால் உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த இயலாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

    விசைத்தறியாளர்கள் தரப்பில் கூறுகையில்: 

    திருப்பூர், கோவை மாவட்ட ங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள், குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். 

    போதுமான வேலை வாய்ப்புகள் இருந்தும் கூலி உயர்வு இல்லாதது, உதிரிபாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று தொடர்ந்த செலவுகளால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை நீடித்து விசைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது. 

    ஜவுளி உற்பத்தியாளர்கள் புதிய கூலி உயர்வை அமல்படுத்தவில்லை என்றால் விசைத்தறிகளை இயக்க முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்றனர். பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் காணப்படாத காரணத்தினால் வருகிற 27-ந் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத் தறியாளர்கள் சங்கத் தலைவர் பல்லடம் வேலுசாமி கூறியதாவது:

    விசைத்தறியாளர்களின் பிரச்சினை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 24-ந்தேதி பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் காலை 10 மணிக்கு திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

    மேலும், அரசு அறிவித்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்தக்கோரி விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 5 லட்சம் குடும்பங்கள் சார்பில் அஞ்சலகம் வாயிலாக குறுஞ்செய்தியை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.

    கூலி உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் திருப்பூர், கோவை மாவ ட்டத்தில் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இன்று 13-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இதனால் விசைத்தறி தொழிலை சார்ந்த 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். ரூ.1000கோடிக்கு மேல் காடாத்துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×