என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
முக்கூடலில் சமாதானம் பேசிய வாலிபரின் மண்டை உடைப்பு
முக்கூடல் அருகே உள்ள கண்டபட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அரியநாயகிபுரத்தை சேர்ந்த 3 வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சமாதானம் பேச சென்ற மற்றொரு வாலிபரின் மண்டையை அரியநாயகிபுரம் வாலிபர்கள் உடைத்தனர்.
நெல்லை:
முக்கூடல் அருகே உள்ள கண்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது37). இவர் நேற்று முக்கூடல் அருகே காரில் சென்றார்.
அப்போது அரியநாயகிபுரத்தை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முக்கூடல் பாண்டியாபுரம் பகுதியில் வைத்து விஜயகுமாருக்கும், அரியநாயகிபுரத்தை சேர்ந்த கார்த்திக் (22), இசக்கிபாண்டி (20), பேச்சிகணேசன் ஆகிய 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் 3 பேரும் சேர்ந்து விஜயகுமாரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். அப்போது பாண்டியாபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அங்கு வந்து இருதரப்பையும் சமரசம் செய்தார்.
ஆனாலும் ஆத்திரம் அடைந்த கார்த்திக், இசக்கிபாண்டி, பேச்சிகணேசன் ஆகிய 3 பேரும் பிரகாசை அடித்து உதைத்தனர்.
இதில் அவரது மண்டை உடைந்தது. அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், இசக்கிபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். பேச்சி கணேசனை தேடி வருகிறார்கள்.
Next Story