search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகப்பு தோற்றம்
    X
    முகப்பு தோற்றம்

    மதுரையில் “கலைஞர் நூலகம்”- மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்

    கலைஞர் நூலகத்தில் குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், நூல்கள் மற்றும் ஒளி, ஒலி காட்சி கூடம், டிஜிட்டல் அறைகள் போன்றவை சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது.
    சென்னை:

    மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் கட்டுமானப்பணிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின், மதுரையில் சர்வதேச தரத்திலான கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதை தொடர்ந்து, மதுரை புதுநத்தம் சாலையில், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, முதல்-அமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், கட்டுமானத்திற்கு ரூ.99 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.

    குறிப்பாக, ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் என்ற பெயரில் அமைய உள்ள இந்த நூலகம் 7 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. கீழ் தளத்தில் 250 கார்கள் நிறுத்தும் வகையிலும், நூலக வளாகத்தில் 300 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதியுடனும் அமைக்கப்படுகிறது.

    மேலும், நூலகத்தின் முகப்பு பகுதியில் கருணாநிதியின் வெண்கல சிலை வைக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடைப்பெற்று வருகிறது. நூலகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு அமைக்கப்படுவதுடன், கண்காணிப்பு கேமரா வசதி, ஒளி, ஒலி அமைப்புகளுடன் சிறிய அளவிலான அறைகள், குழந்தைகளுக்கான பிரிவுகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

    கட்டிடத்தில் 250 மற்றும் 200 பேர் அமரும் வகையில் 2 கூட்ட அறைகள், நூலகத்தில் தமிழ் பிரிவு, ஆங்கிலப்பிரிவு, கலைஞர் பிரிவு மற்றும் குடிமைப்பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரிவு உள்ளிட்ட 27 பிரிவுகளுக்காக தனித்தனி அறைகள் கட்டப்படுகிறது.

    7 மாடிகளும் குளிர்சாதன வசதி செய்யப்படுவதோடு, தமிழ், ஆங்கிலம், ஆன்மிகம் குறிப்பாக சைவம், வைணவம், சங்க இலக்கியம், மொழியியல், வாழ்க்கை சமூகம், அறிவியல், ஆய்வு மாணவர்களுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு, விருது பெற்றவர்களுக்கான நூல்கள், குடிமைப் பணிகளுக்கான நூல்கள், மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள தேவையான புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்க தேவையான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், வேலைவாய்ப்புக்கான நூல்கள் உள்பட 2.5 லட்சம் நூல்கள் வைக்கப்பட உள்ளது.

    குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், நூல்கள் மற்றும் ஒளி, ஒலி காட்சி கூடம், டிஜிட்டல் அறைகள் போன்றவை சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது.

    மின்சார பயன்பாடு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன் இந்த கட்டிடம் 12 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் கட்டிடம் கட்டப்படுவதோடு, இந்த நூலகம் கட்டுவதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள் பங்கேற்றனர்.


    Next Story
    ×