என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: புதுவை கோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தம்
புதுச்சேரி:
தமிழகத்தில் ஒமைக்ரான், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோர்ட்டுகளில் நேரடி வழக்கு விசாரணையை நிறுத்த ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகள், புதுவையில் உள்ள கோர்ட்டுகளில் நேரடி வழக்கு விசாரணை இன்று முதல் நிறுத்தப்படுகிறது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை காணொலியில் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். வழக்குக்கு தேவையான ஆவணங்கள் மின்னஞ்சல், கோர்ட்டு ஊழியர்களால் வைக்கப்படும் பெட்டிகளில் போட வேண்டும் என ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து புதுவை கோர்ட்டிலும் நேரடி வழக்கு விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளது. புதுவை கோர்ட்டில் வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்துக்கு வெளியே அனுப்பப்பட்டனர். இன்று விசாரணைக்கு வரவிருந்த வழக்குகளின் வக்கீல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
நாளை முதல் அனைத்து வழக்குகளின் விசாரணையும் காணொலியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






