
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 48 மணி நேரம் செயல்படும் கட்டணமில்லா சிகிச்சை மையத்தை திறந்து வைப்பதற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்பட்டு சென்றார்.
அப்போது கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு மெகா கொரோனா தடுப்பூசி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த மையத்துக்கு சென்று பார்வையிட்டு தடுப்பூசி போடும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
கொரோனா தடுப்பூசி போட்ட பெண் ஒருவரிடம், நீங்கள் எத்தனையாவது டோஸ் போடுகிறீர்கள்” என்று மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு பதில் அளித்த அந்த பெண், 2-வது டோஸ் போடுவதாக கூறினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தியதுடன் நலமும் விசாரித்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, நேரு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.