search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவிலில் உண்டியல் உடைத்து கைவரிசை- பொது மக்கள் துரத்தியபோது கிணற்றில் விழுந்த கொள்ளையன்

    நாட்டறம்பள்ளி அருகே கோவிலில் திருடிய வாலிபரை பொதுமக்கள் துரத்திய போது தவறி கிணற்றில் விழுந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளியில் பாரத கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை வாலிபர் ஒருவர் திருடி கொண்டிருந்தார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான். பொதுமக்கள் திருடனை துரத்தினர்.

    பொதுமக்கள் துரத்திய போது கிணற்றில் விழுந்தார். அப்போது அங்கிருந்த கிணற்றில் திருடன் தவறி விழுந்தான். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் கொள்ளையனுக்கு காயம் ஏற்படவில்லை.

     நீச்சல் தெரிந்ததால் கிணற்றில் இருந்து மேலே ஏறிவந்தான்.பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளையனை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்த கோழி என்கின்ற மோகன் (வயது45) என்பது தெரியவந்தது. அவர் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஆத்தூர் குப்பம், கல்நார்சம்பேட்டை, அக்ராகரம், வெலக்கல்நத்தம், பச்சூர், புதுப்பேட்டை, மல்லப்பள்ளி உள்ளிட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

    அவரிடமிருந்து உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    Next Story
    ×