என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு ஊரடங்கால் ஊட்டி ரோஜா பூங்கா சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி இருந்ததை காணலாம்.
    X
    முழு ஊரடங்கால் ஊட்டி ரோஜா பூங்கா சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி இருந்ததை காணலாம்.

    நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்- தோட்டக்கலை துறைக்கு ரூ.5 கோடி வருவாய் இழப்பு

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை கொண்டு நீலகிரிக்கு ஆண்டுதோறும் எத்தனை பேர் வருகின்றனர் என்று கணக்கிடப்படுகிறது.
    ஊட்டி:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதன்படி தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்கள் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது.

    நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இந்த சமயத்தில் சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், விடுமுறையை கழிக்கவும் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள். இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டும். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கோடை சீசன் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், கோடை சீசனையொட்டி நடத்தப்படும் அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை கொண்டு நீலகிரிக்கு ஆண்டுதோறும் எத்தனை பேர் வருகின்றனர் என்று கணக்கிடப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் 10 லட்சம் பேர் வந்தனர். 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பார்கள். பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.50 சிறியவர்களுக்கு ரூ.30 நுழைவு கட்டணமாகவும், கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    முழு ஊரடங்கு உத்தரவால் தோட்டக்கலை பூங்காக்கள் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாவரவியல் பூங்கா உள்பட 5 தோட்டக்கலை பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் வராததால் ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×