search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரில் மூழ்கி பலி
    X
    நீரில் மூழ்கி பலி

    ஒடுகத்தூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

    ஒடுகத்தூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்த ஓ.ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சூரியபிரகாஷ், கட்டிட தொழிலாளி. இவரது மகன் யுவராஜ் (வயது 14). ஒடுகத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று யுவராஜ் தனது நண்பர்களுடன் ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திரகாவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றான்.

    தடுப்பணை மீது நடந்து செல்லும்போது யுவராஜ் உள்பட 2 மாணவர்கள் தண்ணீரில் வழுக்கி விழுந்தனர். இதையறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், 2 மாணவர்களையும் தேடினர். இதில் ஒரு மாணவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான்.

    யுவராஜை மீட்க முடியாததால் அருகிலுள்ள ஒடுகத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அணையில் இறங்கி தேடினர்.

    சுமார் 3 மணி நேரம் தேடியும் யுவராஜ் கிடைக்காததால் தடுப்பணையை சிறிய அளவில் உடைத்து சிறிதளவு தண்ணீரை வெளியேற்றி யுவராஜை பிணமாக மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யுவராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×