என் மலர்
செய்திகள்

முக ஸ்டாலின் கூறியதைதான் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்- துரைமுருகன் தாக்கு
வேலூர்:
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்போன் மூலம் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்தால், அதன்பேரில் குறைகளை நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கிறார். அது சாத்தியம் அல்ல. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியை பார்த்து முதல் அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
சட்டம், ஒழுங்கையில் வைத்திருக்கும் அரசு, போலீசாரையே கையில் வைத்திருப்பவர் முதல் அமைச்சர். இப்படி இருந்தும் சசிகலா வருகையால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று போலீசில் அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் சிறையில் இருக்க தி.மு.க. தான் காரணம் என முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால் நாங்கள் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தபோதும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தற்போதும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்ற முதலில் கூறியவர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்து சரித்திரம் படைத்தோம். மு.க.ஸ்டாலின் கூறியதை தான் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை விட்டு செல்லும்போது தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால் தற்போது ரூ.7 லட்சம் கோடி கடன் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக கொடுக்க முடியாத நிலையில் அரசு உள்ளது. அரசின் வருமானம் அனைத்தும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கு தான் செல்லும். அ.தி.மு.க. ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






